மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படும் தீபச்செல்வனின் நடுகல் நாவல்
ஈழத்து கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மலையாள எழுத்தாளர் ஷாபியின் மொழிபெயர்ப்பு பணிகள் குறித்து சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தொடக்கத்தில் இருந்து முடிவுவரை எழுத்தாளர் ஷாபி நடுகல் நாவலை கையில் வைத்திருக்கும் காட்சி வெளியாகி இருந்தது.
பெரும் வரவேற்பை பெற்ற படைப்பு
பல இந்திய தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்து பெரும் பாராட்டைப் பெற்று வரும் எழுத்தாளர் ஷாபி ஒரு கட்டடத் தொழிலாளி. இவர் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவலுடன் குறித்த தொலைக்காட்சிச் செய்தியில் காணப்பட்டார்.

இது குறித்து தீபச்செல்வன் குறிப்பிடுகையில், மலையாள எழுத்தாளர் ஷாபி நடுகல் நாவலை மொழிபெயர்த்து வருவதாகவும் விரைவில் நாவல் மலையாளத்தில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் தொடர்ந்தும் பயங்கரவாதி நாவலையும் அவர் மொழியாக்கம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை கண்டதுடன் உலகத் தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அத்துடன் சிங்களத்திலும் நாவல் மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறித்த நாவல் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.