சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ்!
சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை அந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
மேலும், புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸுக்கு லாங்யா ஹெனிபா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அறிகுறிகள்
அதேவேளை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இந்த வைரஸ் மனிதர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்றும் இந்த வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லாங்யா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.