எமது மத தலங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே - வடக்கில் போராட்டம்!
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு மதிப்பான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தொனிப் பொருளில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்றைய தினம் 86வது நாளாக 10.30 மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
சுழற்சி முறை போராட்டம்
வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாள் செயல் முனைவின் 86 ஆம் நாள் போராட்டத்தில் வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வெள்ளாங்குளம் பகுதியில் ஊர்வலத்தை முன்னெடுத்த மக்கள், பின்னர் பிரதான வீதிக்கு அருகில் நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதிகார பரவலாக்கம் எமது ஜனநாயக உரிமை
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசோ கேட்கவில்லை.
இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்.
13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தலங்களின் புனிதத்தை கொச்சை படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.