பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமரின் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் அங்கீகரிக்கப்படாத இலச்சினைகளை பயன்படுத்தியும் இவ்வாறான போலி உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் சில கருத்துக்களைத் தெரிவிப்பது போன்று போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகளும், அவரது புகைப்படங்களைக் கொண்ட போலியான சமூக ஊடகப் பதிவுகளும் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
சட்டப்படி கடுமையான நடவடிக்கை
இந்தத் தவறான தகவல்களில் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான ஏமாற்று வழிநடத்தல்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஊடகப் பிரிவு, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கும் பிரதமரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |