ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் - தீவிர தேடுதல்
மணல் கடத்தலில் ஈடுபடும் குழுவினரை பிடிப்பதற்கு சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் பணிபுரியும் கங்குவல்ல பிரதேசத்தை சேர்ந்த சார்ஜன் திஹான் (வயது 41) என்ற காவல்துறை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரைத் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று (13ஆம் திகதி) அதிகாலை வேளையில், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை முடக்குச்செட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடும் குழுவினரை மடக்கிப் பிடிப்பதற்காக சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து விசேட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது, கங்கை ஆற்றைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
ஆற்றின் நீர் ஓட்டம் காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை மீட்பதற்காக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து கிண்ணியா காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |