யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! மரக்கறி சந்தைக்கு இளங்குமரன் எம்.பி விஜயம்
புதிய இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு சற்றுமுன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இன்றைய தினம் பருத்தித்துறை நகர வர்த்தகர்களால் பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிவந்த பருத்தித்துறை நகரின் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுமாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அங்கு வருகை தந்திருந்தார்.
இந்தநிலையில் மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
அத்துடன் இந்த சந்திப்பின் போது பருத்தித்துறை வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சங்கம், பொதுமக்கள் என பலரும் குறித்த சந்தையை முன்பிருந்த இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
பருத்தித்துறை மரக்கறி சந்தையினை இடமாற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பேரணியாக சென்று பருத்தித்துறை நகர சபையில் மகஜர் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் செயலாளர் தாரணி கஜரூபன் ஆகியோரிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பங்கேற்ற வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டு 9.00 மணியளவில் பேரணியாக புறப்பட்டு பருத்தித்துறை நகரசபையை சென்றடைந்து கோசங்கள் எழுப்பி போராட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்து காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க பிரதிநிகளினால் நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் மகஜரை கையளித்தனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள், பருத்தித்துறை நகர் முச்சக்கர வண்டி சேவை சங்கத்தினர், மரக்கறி வியாபாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தநிலையில் நகர சபை செயலாளர் வெளியே வர மறுத்த நிலையில் நகரசபை வாயிலில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதுடன் மரக்கறி வியாபாரி ஒருவர் செயலாளர் வெளியே வந்து மக்களை சந்திக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து செயலாளர் வெளியே வந்து தவிசாளருடன் இணைந்து மகஜரினை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றகோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து இன்று (24) காலை 8:30 மணியளவில் பருத்தித்துறை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.
வியாபாரிகள் பல தடவை போராட்டம்
ஆனாலும் புதிய சந்தைக் கட்டிடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்குவரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் சந்தையை நாடுவது குறைவு.

ஆகையால் எமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் பல தடவை போராட்டம் நடாத்தி நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை கையளித்திருந்தனர்.
வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
புதிய மரக்கறிச் சந்தை
ஆனாலும் இதுவரை வியாபாரிகளின்்கோரிக்கைகள் நிறைவேற்றுப்படாத விடத்து மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.

ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
செய்திகள் - பிரதீபன் மற்றும் பூ.லின்ரன்


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |