நாணயத்தாள் அச்சிடுவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டில் நாணயத்தாள் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த 2014 ஆம் ஆண்டில் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளுக்கு, புதிய இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச வருமானம்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான அளவில் மட்டுமே பணம் அச்சிடுகிறோம். இது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகிறது. நீங்கள் பொருளாதாரத்தின் குறிகாட்டிகளைப் பார்க்க வேண்டும்.
கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது, வருமான - செலவு இடைவெளியை 33வீதத்துக்கும் அதிகமாகக் குறைத்துள்ளோம். கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அரச வருமானம் 1.8 டிரில்லியனாக இருந்தது.
இந்த ஆண்டு, இது 2.3 டிரில்லியனாக உயர்ந்து, வருமானம் 24.7 வீதமாக அதிகரித்துள்ளது. செலவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் நிலையாக உள்ளது. எந்தச் சந்தேகமும் வேண்டாம்.” என தெரிவித்தார்.
பணவீக்கம்
இதேவேளை, பணம் அச்சிடப்படும்போது பணவீக்கம் அதிகரிக்காதா? என்ற கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், "அப்படியானால், பணவீக்கம் அதிகரித்திருக்க வேண்டும்தானே? அந்த ஒரு விடயத்தைப் பற்றி நீங்கள் யோசித்தால், தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லை. அவை நிலையாகிவிட்டன.
பணவீக்கம் குறைந்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக பங்குச் சந்தை 20,000ஐ எட்டியுள்ளது. நீங்கள் தனிப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்து அவற்றை முழுமையாக ஒப்பிட முடியாது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பொருளாதாரம் நிலையானது." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 17 மணி நேரம் முன்
