புடினை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் -வெளியான பரபரப்பு தகவல்
உக்ரைனில் அண்மைய நாட்களாக ரஷ்ய படை சந்தித்துவரும் இழப்பை அடுத்து கடந்த புதன்கிழமை ரஷ்யஅதிபர் புடின் ஆற்றிய உரையில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான ரஷ்யாவின் முதல் இராணுவ அணிதிரட்டல் குறித்து அறிவித்தார்.
மேலும் மேற்கத்திய நாடுகள் தனது நாட்டை அழிக்க சதி செய்து, ரஷ்யாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தளபதிகளே புடினை கொல்லக்கூடும்
அத்துடன் மேற்கத்திய நாடுகளை விட அதிநவீன ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக எந்தவொரு குழப்பமும் இல்லை எனவும் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் போரில் கடும் பின்னடைவை சந்தித்தால் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த உத்தரவிட்டால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரைக் கொல்லக்கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் (SSEES) பேராசிரியர் பீட்டர் டங்கன் தெரிவித்துள்ளார்.
UCL ஸ்கூல் ஒஃப் ஸ்லாவோனிக் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் (SSEES) பேராசிரியர் பீட்டர் டங்கன், பிரித்தானிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள தகவலில்,
புடின் இராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட விரும்பினால் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி வாசிலியேவிச் ஜெராசிமோவ் ஆகியோர் மூலமே செயல்படுத்த வேண்டும்.
புடினை கொல்வது அவ்வளவு எளிதானது அல்ல
அப்படி இருக்கையில், புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டால் அதனை ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் மறுத்து விடுவார்கள், பின்னர் அவர்களே புடினுக்கு எதிராக நகர்ந்து அவரைக் கொல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
புடினை கொலை செய்ய வேண்டும் என்றால் FSB இல் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும், ஆனால் புடினை கொலை செய்வது அவ்வளவு எளிதானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.