பிரித்தானியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதிச்சடங்கு - குறியீட்டு நடவடிக்கையில் பாதுகாப்பு தீவிரம்
பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத மிகப்பெரிய நிகழ்வாக நாளைமறுதினம் (19) இடம்பெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வு மாறவுள்ளது.
ராணியின் இறுதி நிகழ்வுகளைக் கையாளும் மத்திய செயல்பாட்டுக் குழுவில் 100 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் 24 மணிநேரமும் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்து நின்ற மக்களை திடீரென மன்னர் சார்ளஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட நூற்றுக்கணக்கான உலகத் தலைவர்கள் மற்றும் இறுதிச் சடங்கில் ஜப்பானிய பேரரசர் உட்பட உலகின் ஏனைய முடியாட்சி பிரபலங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் லண்டனில் கூடுவதால் Operation London Bridge குறியீட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
24 மணிநேர காத்திருப்பு
இந்த நிலையில், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக காத்திருப்போர் ஐந்து மைல் நீளமுள்ள வரிசையில் குறைந்தது 24 மணிநேரம் காத்திருப்புக்கு பின்னர்தான் மண்டபத்துக்கு செல்லமுடியும் என்பதால் மக்கள் வரிசையில் இணைவதை நிறுத்துமாறு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை, இன்று ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்து நின்ற மக்களை சந்திக்க மன்னர் சார்ள்ஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோர் திடீரென நேரில் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், ராணியின் உடலப்பேழைக்கு அருகில் செல்லமுயன்ற நபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மன்னர் சார்ள்ஸ் மற்றும் அவரது உடன்பிறப்புகளான இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் நேற்றிரவு தமது பாரம்பரிய விழிப்புணர்வு காவலில் நின்ற பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பலத்த பாதுகாப்பு
பிரித்தானியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பின்னர் அதாவது, 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் முதலாவது அரச முறை இறுதிச் சடங்கு இதுவென்பதால் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தபடுகிறது.
உலகத்தைப் பொறுத்தவரை 2012 இல் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குக்கு பின்னர் அதிக உலகத் தலைவர்கள் கூடும் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.