நான் பிரதமராகாவிட்டிருந்தால் இலங்கை படுமோசமடைந்து இருக்கும்!! ரணில் பகிரங்கம்
நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "நாட்டின் தற்போதைய நிலைக்கு கொவிட் காரணமில்லை பல நாடுகள் கொவிட்டின் பின்னர் மீண்டும் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றன. பொருளாதாரத்தை தவறாக கையாண்டமையே இந்த நிலைக்கு காரணம்.
2019 இல் பிரதமர் பதவியை இழந்தது முதல் நான் நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்துவருகின்றேன். தற்போதையை நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை தவிரவேறு வழியில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு பிரதமர் செய்தி
நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளோம். அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த நடைமுறையில் இணைந்துகொள்ளலாம் அதன் மூலம் நாட்டில் தற்போது காணப்படுகின்ற பதட்டத்தை சிறிது குறைக்க முடியும்.
அவர்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் சில அரசியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர்", எனக் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கைது தொடர்பில் ரணில்
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பது கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க நீதிபதிகளை அடிப்படையாக வைத்தே கைதுகள் இடம்பெறுகின்றன சமீபத்தைய வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சட்டத்தை எவர் மீறியிருந்தாலும் அவர்களின் தகுதியை கருத்தில் கொள்ளாமல் அவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும் விசாரணைகளின் அடிப்படையில் ராஜபக்சாக்களிற்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.