சற்று முன்னர் பிரித்தானியாவின் பிரதமாரக பதவியேற்றார் ரிஷி சுனக்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் சற்று முன்னர் பதவியேற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து, பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரித்தானியாவின் 57 வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இதன்மூலம், பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகவும், 200 ஆண்டுகளுக்கும் மேலான இளைய பிரதமர் என்ற பெருமையையும் ரிஷி சுனக் பெற்றார்.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார்.
சார்லஸ் மன்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ரிஷி சுனக்விற்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பிரதமராக ரிஷி சுனக், பிரிட்டனின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
பொருளாதார மேம்பாடு, பண வீழ்ச்சியை சரி செய்தல், கட்சியில் ஒற்றுமையைக் கொண்டுவருதல் என்று பல பொறுப்புக்கள் தற்போது ரிஷி சுனக் வசம் உள்ளன.
எரிவாயுக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் பதவியேற்ற ட்ரஸ், பல்வேறு வரிச் சலுகை அறிவித்தார். இது கடந்த மாதம் தாக்கல் செய்த மினி வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.
பவுண்ட் வீழ்ச்சி
இந்த வரவு செலவுத்திட்டம் எதிரொலியாக டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, அவர் கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார்.
தற்போது, அதே நிதிக் கொந்தளிப்புடன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.