ரஷ்ய : உக்ரைன் போர்! புடின் எடுத்த அவசர முடிவு - திரட்டப்படும் படைகள்
படைகளை திரட்ட உத்தரவு
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் படைகளை திரட்டுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையான்றில் இந்த உத்தரவு குறித்து பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கடந்த ஏழு மாத காலமாக, உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில் இராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.
ஏற்கனவே இராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களையும் திரட்டமாறும், ஏற்கனவே இராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு பணிகளில் உள்ளோரையும் திரட்டுமாறும் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை
ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சை தொடங்க விடாமல் உக்ரைனை மேற்கு நாடுகள் தடுப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
"சுதந்திரம் பெற்ற நிலங்களில்" உள்ள மக்களைப் பாதுகாக்க அவசர முடிவை எடுப்பது ரஷ்யாவின் கடமை என்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது என்று புடின் கூறினார்.
மேற்கத்தேய நாடுகளின் எல்லை மீறல்
அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் எல்லை மீறி செயற்படுவதாக குற்றம்சாட்டிய புடின், ரஷ்யாவை பலவீனப்படுத்தி அழிக்கும் நோக்கில் மேலை நாடுகள் செயற்படுகின்றன என குற்றம்சாட்டினார்.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள பகுதிகள் ரஷ்யாவின் பகுதிகளாக மாற விரும்புகிறதா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்த ஒரு நாளுக்குப் பின் புடின் இவ்வாறு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.