சிறிலங்காவின் 21 ஆம் திருத்த முன்நகர்வில் திடீர் தாமதம்
கட்சித் தலைவர்கள் இணக்கப்பாடு
சிறிலங்கா அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் கட்சித் தலைவர்கள் ஒருமித்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
எனினும் இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச் சட்ட முன்மொழிவில் அரச தலைவருக்கு அதிகாரங்களை போதிய அளவில் குறைக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு அதிகமளிப்பதை நோக்கமாக கொண்ட 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

வரைவு திருத்தம் தொடர்பான கருத்துக்களை முன்வைக்க கட்சித் தலைவர்கள் முன்வைப்பதை நோக்கமாக கொண்டு இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அடுத்த கட்ட நகர்வு
இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 21 ஆவது திருத்தச் சட்டமூல வரைபை இறுதி செய்வதென இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு தரப்பினர் மேலதிக தெளிவுபடுத்தல்களை பெறுவதற்கு விரும்பினால் நீதி அமைச்சரிடம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.