பதவி விலகியதன் பின்னரும் ஒரு நாள் நாடாளுமன்றம் செல்வதற்காக பல இலட்சங்களை செலவிட்ட மகிந்த!
சிறிலங்கா முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்திற்கு ஒரு நாள் உலங்குவானூர்தியில் வருவதற்காக 8 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்திற்கு அமைய ஊடகவியலாளர் ராஹூல் சமந்த ஹெட்டியாராச்சி, சிறிலங்கா விமானப்படையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் பயணத்திற்கு 875 லீட்டர் எரிபொருள் செலவு
கடந்த மே 18 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதற்காக 8 லட்சத்து 3 ஆயிரத்து 605 ரூபாவை முன்னாள் பிரதமர் செலுத்தியுள்ளார்.
மகிந்த, தனது தனிப்பட்ட செயலாளர் ஊடாக விமானப்படைக்கு இந்த பணத்தை செலுத்தியுள்ளார். இந்த ஒரு நாள் பயணத்திற்கு உலங்குவானூர்திக்கு 875 லீட்டர் எரிபொருள் செலவாகியுள்ளதுடன் இதற்காக 3 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
போராட்டங்களால் பதவி விலகிய மகிந்த
ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 4 லட்சத்து 84 ஆயிரத்து 5 ரூபா செலவாகியுள்ளது. உலங்குவானூர்தியை தரையிக்க ஆயிரத்து 100 கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்களின் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ச, திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.