மக்களை வதைக்கும் அரசாங்கம் எமக்கு தேவையில்லை- கடும் ஆத்திரத்தில் மக்கள்!
கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக, மண்ணெண்ணெய் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தால் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களாகவே, கொட்டகலை நகரிலுள்ள எரிபொருள் நிலையத்துக்கு மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்.
எனினும், மண்ணெண்ணெய் இல்லை எனக்கூறி மக்கள் திருப்பி அனுப்படுகின்றனர். இந்நிலையிலேயே மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திம்புள்ள - பத்தன காவல்துறையினர், மக்களுக்கு நிலைமையை எடுத்துரைத்து, அவர்களை கலைந்துசெல்லுமாறு கோரினர். இதனையடுத்து மக்களும் அங்கிருந்து சென்றனர்.
போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியது. எனினும், மண்ணெண்ணெய் வைத்துக்கொண்டு தான், இப்படி அநீதி செய்கின்றனர், தற்போதைய அரசும் மக்களை வதைக்கின்றது. இப்படியான அரசு தேவையில்லை என மக்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.