காலி முகத்திடலில் மாபெரும் பேரணி- அலரிமாளிகைக்கு முன் குவிக்கப்பட்ட காவல்துறை!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.
இதனையொட்டி, காலிமுகத்திடலில் பல்வேறு எதிர்ப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் காரணமாக அலரிமாளிகைக்கு முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து கொள்ளுபிட்டி பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க முடியாத மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அதன் போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த போராட்டம் சில நாட்களில் காலி முகத்திடலில் நிரந்தர போராட்டக்களமாக 'கோட்டா கோ கம' என மாற்றமடைந்தது.
அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக 'மைனா கோ கம' என்ற போராட்டக் களமும் தோற்றம்பெற்றிருந்தது.
50ஆவது நாள்
இதனையடுத்து இடம்பெற்ற வன்முறைகளின் காரணமாக மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். காலிமுகத்திடலிலுள்ள அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட 'கோட்டா கோ கம' போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டத்தின் 50 ஆவது நாளை பூர்த்தி செய்யும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால், இன்றைய தினம், பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டது.
போராட்ட ஏற்பாடு
அதற்கமைய, காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன், கருப்பு கொடிகள் கட்டப்பட்டது. புதிய பதாதைகளை கட்சிப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே சற்று முன்னர் காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, இன்று கொள்ளுப்பிட்டியிருந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.