அதளபாதாளத்திற்குள் விழவிருந்த இலங்கையின் மீட்பராக ரணில் - கை கொடுக்கும் சர்வதேச நாடுகள்!
சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி ரணில் இல்லையெனில் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே தான் மக்கள் நலன் கருதியே நாம் ரணிலை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து வருகின்றன.
இதேவேளை, இந்த அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார். அதன்மூலம் மலையகத்துக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
பலமான அமைச்சராக ஜீவன் தொண்டமான்
தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களுக்கு கூடாரங்களும், கதிரைகளும், மருதப்பாண்டி ராமேஷ்வரன் தலைமையில், தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா போன்ற பகுதிகளில் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாட்டை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். ஆனால் எவரும் முன்வரவில்லை. ரணில் விக்ரமசிங்க தான் அச்சமின்றி பொறுப்பேற்றார்.
தற்போது நாட்டைப் படிப்படியாக மீட்டு வருகின்றார். உலக நாடுகள் அவரை ஆதரிக்கின்றன. அவர் நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் நிலைமை மோசமாக இருக்கும்.
இலவச சத்துணவுத் திட்டம்
நாமும் மக்கள் பக்கம் நின்று, மக்கள் சார்பில் அவரை ஆதரித்தோம். அவரின் அரசில் எமது பொது செயலாளர் அமைச்சராக இருக்கின்றார். பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அண்மையில் கூட உலக வங்கியின் ஆதரவுடன், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இலவச சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, நானும், எமது தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் பிரதேச சபையில் இருந்து தான் மக்கள் பிரதிநிதித்துவ அரசியலை ஆரம்பித்தோம். அப்போது மக்கள் தமது பிரச்சினைகளை எம்மிடம் எடுத்துரைப்பார்கள்.
பலமானதொரு ஸ்தாபனமாக இ.தொ.க
நாம் எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறி, தேவையான வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்வோம். இவ்வாறு நாம் மக்கள் சேவையாற்றியதால் தான் எம்மை மாகாணசபை முதல் நாடாளுமன்றம் வரை மக்கள் அனுப்பி வைத்தனர்.
எனவே, உங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துக் கூறவும் பிரதிநிதி ஒருவர் அவசியம். அதனால் தான் இப்பிரதேசத்திற்கு துடிப்பான இளைஞர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
எனவே, அவருக்கு ஆதரவளித்து, அவர் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமானதொரு ஸ்தாபனமாகும். அதன் பொது செயலாளர் பலமான அமைச்சராக இருக்கின்றார்.
உள்ளூராட்சி தேர்தல்
எனவே, எம்மால் தான் மலையகத்துக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். மக்கள் மென்மேலும் ஆணை வழங்கினால் எமது பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கப்படும்.
அதற்கு இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலை சிறந்த களமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சச்சிதானந்தன், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர்கள், தோட்ட தலைவர், தலைவிமார்கள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











