மாயமான மில்லியன் கணக்கான டொலர்கள்! மீட்பதற்கு போராடும் அரசாங்கம்
நிதி அமைச்சின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவி சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீட்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், மின்னஞ்சல் ஊடாகவே இந்த ஹேக்கர்கள் கணினி அமைப்பிற்குள் நுழைந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹேக்கர்கள் கைவரிசை
இந்தச் சம்பவம் குறித்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும், கடன் வழங்கிய தரப்பினருக்கும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதமே இவ்வாறான ஊடுருவல் முயற்சிகள் குறித்துத் தங்களுக்குத் தெரியவந்ததாகவும், அப்போது உரிய வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த காலக் கொடுப்பனவுகள் குறித்து ஆராய்ந்தபோது, கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை தொடர்பான ஒரு பரிவர்த்தனையிலும் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஆதரவு
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொடர்பான சிக்கலான நிலைமையை தான் அறிவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இத்தகைய விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் டொலர் கடன் தவணைப் பணம் சைபர் குற்றவாளிகளின் கைக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை இலங்கையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |