தமிழினத்தை மட்டுமல்லாது நாட்டையே அழித்த ராஜபக்சாக்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ரணில்!
தமிழ் மக்களை, தமிழ் இனத்தை, மட்டுமல்லாது, இலங்கை நாட்டையே குட்டிச்சுவராக்கிய மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற செயற்பாட்டடில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக நீரோட்டத்திலே இந்த குடும்பத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவது என்பது உண்மையிலே அந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“சிறிலங்காவின் அதிபராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க ஐ.நா சபையிலே கூறி வந்த கூற்றுக்கு மாறாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது, ஐ.நா சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதிபரானதும் கொடுத்த வாக்குறுதியை மறந்த ரணில்
அதிலே ஒன்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது அதிபராக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐ.நாக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
ஆகவே பிரதமராக இருந்து அதிபராக வந்த ரணில் விக்ரமசிங்க ஐ.நா சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
என்னை பொறுத்தமட்டிலே சட்டங்கள் மாறுகின்றன. எல்லாம் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையாகத்தான் வரும் என்பது என்னுடைய கருத்து. ஆகவே இது தொடர்பில் ரணில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ரணில் நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.
அதை விட ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தை ரணில் பாதுகாக்கின்றார் என அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
நியாயமான கோரிக்கைக்காக போராடியவர்களை கைது செய்வது சந்தேகத்திற்கிடமானது
மக்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட அந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். தற்போது அதிபராக ரணில் வந்திருக்கிறார் என்றால் அந்த போராட்டத்தின் பின்னணிதான்.
ஆகவே ராஜபக்ச குடும்பத்தை எதிர்க்கின்ற வகையிலே தான் இந்த போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது சட்டங்களின் ஊடாக போராடியவர்களை கைது செய்து சிறையிலே அடைப்பது என்பது ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை செய்ய ரணில் துணிகிறார் என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.
அந்த வகையிலே இந்த விடயத்திலே மக்களுடைய ஜனநாயக போராட்டத்தின் ஊடாக தான் ரணில் விக்ரமசிங்க அதிபராக வந்தார். ஆகவே அந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதனை கூறி கொள்ள விரும்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

