கையிருப்பில் 4 பில்லியன் ரூபா இருந்தும் உதவிகளை வழங்காத கோட்டாபய..!
கோட்டபாய ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் அதிபர் நிதியத்தில் நான்கு பில்லியன் ரூபா நிதி இருந்த போதிலும், அந்த நிதியத்தின் ஊடாக எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கை ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதிபர் நிதியத்தின் நிதியானது அவசர சத்திரசிகிச்சைகளுக்கு பணம் சம்பாதிக்கும் திறன் இல்லாத சமூகங்களுக்கு நிதியுதவிகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபர் நிதியத்திற்கு நிதி உதவி கோரி சுமார் ஏழாயிரம் மனுக்கள் வந்தபோதிலும் எவருக்கும் நிதியுதவி வழங்கப்படவில்லை என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ரணிலின் பணிப்புரை
அந்நிலையில், நிதி நிவாரண உதவிகள் தேவைப்படுவோருக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அதிபர் நிதியத்தினை மீண்டும் பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் நிதியில் இருந்து நிவாரணம் பெற விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.