தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்தவர் சுமந்திரனே : ஜனா பகிரங்கம்
முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்து இறுதி ஆணியை சவப்பெட்டிக்கு அடித்த பெருமைக்குரியவர் சுமந்திரன் (M. A. Sumanthiran) என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - பழுகாமம் பிரதேசத்தில் நேற்று (08) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாராட்சியில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) பதவி ஆசையே என மீண்டும் தன்மீதான தார்மீகப் பொறுப்பை கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் மீது சுமத்தியிருந்தார்.
குற்றஞ்சாட்டும் சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதவி ஆசையால் உடைத்தனர் என அடுத்தவர் மீது விரல் நீட்டும் சுமந்திரன் அதே பதவி ஆசையால் தனது கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தாத அவரது தான்தோன்றித்தனமான முடிவே கூட்டமைப்பின் இன்றைய நிலைக்கு காரணம் எனபதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

தனது அரசியல் எதிரிகள் தனது பெயரை உச்சரிக்காது அரசியலை நடத்த முடியாது என பெருமையாக வேறு பேசிக் கொள்கிறார். அவ்வாறு அவர்கள் கூறுவதை தனது வெற்றியாகவும் தனக்கான பிரசாரமாகவுமே எடுத்துக் கொள்வதாகவே அந்த ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
உண்மையில் சுமந்திரன் இதனை புத்திக் கூர்மையுடன் கூறுகின்றாரா என்று எனக்கு ஐயமாக உள்ளது. அல்லது இக் குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக் கொண்டுதான் கூறுகின்றாரா என்றும் எனக்கு ஐயமுள்ளது.
மத்திய வங்கிக் கொள்ளை
எமது நாட்டு அரசியலைப் பொறுத்தவரை இலங்கை மத்திய வங்கிக் கொள்ளை பற்றிக் கூறுவதாயின் ரணில் விக்ரமசிங்கவையும், ஹெல்பிங் ஏஜ் அம்பாந்தோட்டை பற்றிக் கூறினால் மகிந்த ராஜபக்சவையும், பத்து வீத கமிசன் என்றால் அக்காலத்து நிதியமைச்சரின் பெயரையும், அவன்ஹார்ட் மற்றும் ஊழல் பற்றிப் பேசினால் கோட்டாபயவையும், அண்மைக்காலத்தில் மிகவும் பிரபலமான மருந்து மாபியா பற்றிப் பேசினால் ஹெகலிய ரம்புக்வெல்லவையும் எவ்வாறு தவிர்க்கமுடியாதோ அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவைப்பற்றிக் கூறும்போது சுமந்திரன் பற்றிக் கூறுவது தவிர்க்க முடியாது.

இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்திருந்தவர்கள் சிதைவின் பின்னர் சுமந்திரன் பெயரை உச்சரித்து இதனைக் கூறுகின்றார்களே ஒழிய தமது அரசியல் இலாபத்துக்காகக் அவரது பெயரைக் கூறவில்லை. சுமந்திரன் புகழ் பாடுவதற்காக சுமந்திரன் பெயரைக் கூறவில்லை. சுமந்திரன் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செய்த சதியினை அம்பலப்படுத்துவதற்காகவே அவரது பெயரை உச்சரிக்கிறார்கள்.
குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்
இவ்வாறு உச்சரிப்பது அவருக்குப் பெருமையா, அவருக்கு பிரபலமா, அதனை அவர் பெருமையாக நினைக்கின்றாரா? இது உங்களுக்கு ஒரு பெருமைமிகு பிரசாரமா இதை நீங்கள் பெருமை மிகு பிரசாரமாகக் கருதுவீர்களென்றால் தங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? சுமந்திரன் தொடர்பாக எதிரணியினர் மட்டும் இக்குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.

அவரின் தமிழரசுக்கட்சியினரும் அவரோடு இன்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அவரது சக வேட்பாளர்களும் கூட இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்க மேடைகளில் கூறிவருகின்றார்கள். அவ்வாறெனில் உங்களுக்கெதிராக உங்களுடைய கட்சியினரே குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெருமையா என்பதனைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கான தகுந்த, பதிலினை 14ஆம் திகதி தமிழ்த் தேசியம் மீது பற்றுள்ள எம் தமிழ் மக்கள் தகுந்த பதிலடி மூலம் தமிழரசுக்கட்சியை மண்கௌவ்வ வைத்து தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 1 நிமிடம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்