திருகோணமலையில் கஸ்ஸப்ப தேரர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த குழு துரத்தியடிப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மூன்று பேரால் ஒரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், குறித்த வழக்கில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உறவினர்கள் அங்கு வருகை தந்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
துரத்தியடிக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள்
இதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த நாட்டின் கரையோர பாதுகாப்பு தொடர்பான கட்டளைச்சட்டம் பாரதூரமானதாக உள்ளதாகவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தான் புத்தர் சிலை விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த கைதானவர்களது உறவினர்கள், இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் அமைதியை குழப்புவதாகக் குறிப்பிட்டனர். மேலும், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளுக்கு தொடர்ச்சியாக வருகை தரப்படும் காரணமாக, கைதிகளின் உறவினர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் பார்வையாளர் நேரங்களிலும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |

