அதிபர் மாளிகையில் அதிபரின் கதிரையில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது
அதிபர் நாற்காலியில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் கைது
கோட்டை அதிபர் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து அதிபரின் உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்த இரு பெண்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 49 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் மாளிகைக்குள் நுழைந்து அதிபரின் உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்திருப்பதை வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.
அதிபர் மாளிகைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சந்தேகநபர்களின் பல புகைப்படங்கள் காவல்துறையினரால் ஊடகங்களில் வெளியிடப்பட்டதுடன், அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டது.
சந்தேக நபர்கள் பலர் கைது
ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களை அடுத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு கடைகளை நடத்தும் பெண்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அதிபருக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், காலிமுகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த 9ஆம் திகதி முதல் கொழும்பு வந்த மக்கள் அதிபர் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பல நாட்கள் தங்கியிருந்தனர்.
அதிபரின் மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துக்கள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.