ரிஷி சுனக்கின் அபார வெற்றி - உள்ளிருந்தே அழிக்கப்படும் கட்சி; விலகும் ஆதரவாளர்கள்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, சில டோரி ஆதரவாளர்கள் தங்கள் உறுப்பினர் நிலையை ரத்து செய்ய தொடங்கியுள்ளனர்.
மோசமான பொருளாதார திட்டங்களால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார சரிவுக்கு பொறுப்பேற்று, பிரதமராக பதவியேற்ற 44 நாட்களிலேயே பதவி விலகுவதாக லிஸ் டிரஸ் அறிவித்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு சேகரிப்பு போட்டியில் ரிஷி சுனக் 200 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற்று அபாரமாக வெற்றி பெற்றார்.
விலகும் டோரி ஆதரவாளர்கள்
இதனை தொடர்ந்து ரிஷி சுனக் இன்று பிற்பகலில் பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் ரிஷி சுனக் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த சில டோரி ஆதரவாளர்கள் தங்கள் உறுப்பினர் நிலையை ரத்து செய்ய தொடங்கியுள்ளனர்.
சில உறுப்பினர்கள் இந்த செய்தியால் மகிழ்ச்சியடைந்தாலும், அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் கட்சி உறுப்பினர்களால் வாக்களிக்க முடியவில்லை என்பது பலரை பொங்கியெழ செய்துள்ளது.
இது தொடர்பாக 18 வயதிலிருந்தே கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களித்த 60 வயதான ஓய்வு பெற்ற செவிலியர் லின் பாண்ட் தெரிவித்துள்ள கருத்தில்,
ரிஷி சுனக் கட்சியை வழிநடத்துவார் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கை ஏற்க முடியாது
மேலும் அனைத்து விஷயங்களும் மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் 2019 ஆம் ஆண்டில் இவ்வளவு அற்புதமான வெற்றியைப் பெற்ற ஒரு கட்சி, உள்ளிருந்து அழிக்கப்படுகிறது என லின் பாண்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை ஆதரிக்க என்னால் முடியாது, நான் அவர்களை நம்பவில்லை, இன்று வரை நான் எதற்காக வாக்களித்தேன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 33 வயதான மற்றொரு நபர் நாங்கள் ஒருபோதும் ரிஷி சுனக்கிற்கு வாக்களிக்கவில்லை, "இப்போது நான் கன்சர்வேடிவ் உறுப்பினராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.