தனியார் கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமிடையில் மோதல்! வவுனியாவில் சம்பவம்
மோதல்
வவுனியாவில் நேற்றிரவு தனியார் கல்வி நிலையமொன்றில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆசிரியர் ஒருவரைத் தாக்க முற்பட்ட மாணவர்களினால் ஆசிரியருக்கு பதிலாக அருகில் நின்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் கல்வி நிலையத்தில் சம்பவம்
வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் அங்கு நின்ற மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அவதானித்த ஆசிரியர் தனது கல்வி நிலையத்துடன் தொடர்பற்ற மாணவர்களை அங்கிருந்து செல்லுமாறும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இதன்போது திடீரென்று தலைக்கவசத்துடன் நின்ற மாணவர் ஒருவர் குறித்த ஆசிரியரை இலக்கு வைத்து தாக்க முற்பட்டபோது அருகில் நின்ற மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
19 வயது மாணவர் விபத்துப் பிரிவில் சிகிச்சை
இதன்போது காயமடைந்த தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட19 வயது மாணவர் வைத்தியசாலை விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து காயமடைந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
