தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் நடைபெற்ற விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம் , அகில இலங்கை இந்துமாமன்றம், யாழ்ப்பாண தமிழச்சங்கம், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியன இணைந்து இந்த துறவற நூற்றாண்டு விழாவினை ஏற்பாடுசெய்திருந்தன.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டதுடன் வடமாகாண ஆளுனர் நாகலிம்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.ஸ்ரீபவானந்தராஜா, யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலர்கள்,செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் ,ஆசரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
துறவற நூற்றாண்டு
நிகழ்வின் ஆரம்பத்தில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடனும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்துடனும் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது சுவாமி விபுலானந்தரின் உருவப்படங்கள் தாங்கிவரப்பட்டதுடன் சுவாமியின் வேடம் தாங்கி மாணவர்களின் ஊர்திப்பவனியும் இடம்பெற்றது.
விபுலானந்தரின் துறவற நூற்றாண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
விபுலானந்த அடிகள் என்கின்ற நூலும் வெளியிடப்பட்டதுடன் நினைவுப் பரிசும் விருந்தினர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" எனும் பாடலை இயற்றிய சுவாமியவர்கள் 19 ஆம் திகதி ஜுலை மாதம் 1947 இல் தனது 55 ஆவது வயதில் இறையடி சேர்ந்மை குறிப்பிடத்தக்கது.








