சிறிலங்கா வரலாற்றைப் புரட்டப்போகும் '2025' - பிரபல ஜோதிடரின் அச்சம்தரும் கணிப்பு
மிகப் பெரிய ஆட்சி மாற்றம்
2025 ஆம் ஆண்டுக்கு முன் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க முயற்சித்தால், பாரிய இரத்தக் களரி ஏற்படும் என பிரபல ஜோதிடர் பி.ஜீ.பீ.கருணாரத்ன அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ரணில் விக்ரமசிங்கவின் கிரகப்பலன் மிக வலுவாக இருப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டு நாட்டில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுடன், மக்கள் மத்தியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கிரகப் பலன்கள் பலமாக இருக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது என்று இதற்கு முன்னர் நான் கூறியிருந்தேன்.
மகிந்தவின் அரசியல் காலம் முடிவு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலை பொதுமக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். அவர்களால், ஆட்சிக்கு வர முடியாது.
பொதுஜன பெரமுனவின் தலைவரது (மகிந்த ராஜபக்ச) அரசியல் காலம் முடிவுக்கு வந்து விடும் என எனக்கு புலப்படுகிறது. இன்னும் மூன்று ஆண்டு காலம் அவரது அரசியல் செயற்பாடுகள் இருக்கும்.
புது முகங்களுக்கு அதிபர் வாய்ப்பு

முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் அரசியலில் பிரவேசித்து தேர்தலில் போட்டியிட்டால், முதல் தேர்தலிலேயே வெற்றி பெறுவார்.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்படுவார்.
பாரிய இரத்தம் சிந்தல்கள்

போராட்டங்கள் நடத்தப்பட்டால், 2025 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். போராட்டகாரர்கள் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோர வேண்டும். தேர்தல் நடத்தப்பட்டால், அனுரகுமார திஸாநாயக்க முதலிடத்திற்கு வருவார். எவராலும் அதனைத் தடுக்க முடியாது.
2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தால், பெரிய இரத்தம் சிந்தல்கள் ஏற்படும். மக்கள் அச்சம் கொள்வார்கள். இதன் பின்னர் மறுதிகதி அறிவிக்கப்படாது தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். அப்போது அனுரகுமார ஆட்சிக்கு வருவது தடுத்து நிறுத்தப்படலாம்” என்றார்.