சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உள்வாங்குவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மிகவும் தன்னிச்சையான முறையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் தற்போது கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதகமான முறையில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் திணைக்களத்திற்குள் உள்வாங்க முயற்சிக்கிறார்.

நாங்கள் பணிப்பாளர் நாயகத்திடம், இந்த நியமனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த நியமன முறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் எனக் கூறினோம்.
ஆயினும் அவரது தன்னிச்சையான முடிவுகள் காரணமாக, எங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி, தவறான முறையில் இந்த நியமனங்களை மேற்கொள்கிறார்.
பாரிய கண்டனப் போராட்டம்
எமது கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள் மாத்திரமன்றி, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள், பிராந்திய உதவியாளர்கள், பிராந்திய காப்பாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது.

13 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு ஒரு கலந்துரையாடலை வழங்குங்கள் எனக் கோரியிருந்தோம். இதுவரை பணிப்பாளர் நாயகம் எமக்குக் கலந்துரையாடலை வழங்கவில்லை. இந்த நிலைமையை அவரே உருவாக்கினார்.
அதனால், இன்று பத்தரமுல்லையிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கண்டனப் போராட்டமொன்றை நாம் முன்னெடுக்கிறோம்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |