சமர்ப்பிக்கவில்லை என்றால் பதவி விலகுவேன்! அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்து ஹரின் அதிரடி
அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
நாட்டின் பிள்ளைகளுக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியானவேளையில் அமைச்சராக பதவியேற்றுள்ளேன்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது, இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன்.
சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து அறிஞர்களையும் சந்தித்து குறுகிய காலத்தில் 10,000 முதல் 15,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
அனைவருக்கும் ஒரு நம்பிக்கையான வேண்டுகோள் விடுக்கிறேன். அமைச்சு பதவி என்பது கிரீடம் அல்ல. முள் கிரீடம். இது ஒரு தற்கொலைப் பணி.
எல்லா அரசியல் கட்சிகளையும், கிராமங்களையும் மறந்து, திட்டுகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் செவிசாய்த்து, நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக நாம் செய்த காரியம். நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.