ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தகவல்களை சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞன் : நீதிமன்றம் அளித்த உத்தரவு
ஐ.எஸ்.ஐ.எஸ்(isis) பயங்கரவாத அமைப்பின் போர் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக கைது செய்யப்பட்ட இளைஞரை 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (28) அனுமதி அளித்துள்ளது.
இம்மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரத்மலானை(ratmalana) பொருபன வீதியைச் சேர்ந்த இமாட் ஷமாம் என்ற சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க அனுமதியளித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை பிரச்சாரம் செய்தல்
சமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை பிரச்சாரம் செய்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சித்தாந்தங்களை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளிகளை எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக நீதிமன்றில் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த சந்தேக நபரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிகளில் குறிப்பிடப்பட்ட சின்னங்கள் அடங்கிய மோதிரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை
இந்த சந்தேகநபரின் தொடர்புடைய நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சந்தேகநபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |