இனிப்பு கொடுத்து 10 வயது மாணவியை கடத்த முயன்றதால் பரபரப்பு
பிரசித்தி பெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விபயிலும் 10 வயது மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளை, துஹூல்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, பண்டாரவளை நகரில் பிரசித்தி பெற்ற பாடசாலையில் கல்விபயிலும் மாணவியையே இவ்வாறு கடத்திச் செல்வதற்கு நபர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
வெள்ளை வானில் இருந்து வந்த இளைஞன்
கடந்த வௌ்ளிக்கிழமை (19) பாடசாலை நிறைவடைந்ததும், பேருந்துக்காக மாணவி தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாடசாலையில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில், வௌ்ளை வானொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. முகத்துக்கு கறுப்புத் துணியை கட்டியிருந்த இளைஞன் ஒருவர், அந்த வானில் இருந்து இறங்கி, சிறுமியின் அருகில் வந்து, தாய்க்கு சுகமில்லை. அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். உன்னிடம் இந்த சொக்கலேட்டை கொடுத்து, வானில் ஏற்றிக்கொண்டு வரச்சொன்னார் என்று மாணவியிடம் தெரிவித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் விசேட நடவடிக்கை
எனினும், தன்னுடைய அம்மா, தனது தம்பி கல்விபயிலும் பாடசாலைக்குச் செல்வதாக, வியாழக்கிழமை தன்னிடம் தெரிவித்திருந்தமை மாணவிக்கு ஞாபகத்துக்கு வந்துள்ளது. அதனையடுத்து அருகிலிருந்த படிக்கட்டுகளின் ஊடாக ஓடிச்சென்ற அந்த மாணவி, தனக்குத் தெரிந்த தங்க ஆபரண கடைக்குள் நுழைந்து தப்பித்துக்கொண்டார்.
அதன்பின்னர், தன்னுடைய தாயுடன் வந்த மாணவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறிப்பாக பாடசாலைகளுக்கு அருகிலும், மாநகரிலும் மாணவிகள் வருபவர்களிடம் வித்தியாசமாக பேச வேண்டாம் என்றும், அவர்கள் சாப்பிட கொடுக்கும் சொக்லேட், டொபி பிஸ்கட், பானங்கள் போன்ற பல வகையான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
