மீண்டும் அரசியல் களத்தில் வீறு நடைபோடும் மகிந்த - கேடயமாக்கப்படவுள்ள விமல் மற்றும் கம்மன்பில!
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் தம்வசப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு திரைமறைவு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ராஜபக்ச தரப்பு வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த வருடம் பிரதமர் பதவியில் இருந்து விலகியதிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசியல் செயற்பாடுகள் எவற்றிலும் ஈடுபடவில்லை. ஆனால் இப்போது அவர் வீரியத்துடன் அரசியல் களத்தில் மீண்டும் இறங்கியுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே, விமல் தரப்பை மீண்டும் கட்சிக்குள் ஈர்ப்பது தொடர்பில் மகிந்தவின் ஏனைய சகாக்கள் ஆலோசைனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை
மொட்டுக் கட்சியின் தலைமையகம் பத்திரமுல்லையில் அமைந்துள்ள போதிலும், விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தற்போது களைகட்டியுள்ளது.
தினமும் கூட்டங்கள் இடம்பெறுகின்றன. இப்போது மஹிந்தவின் இந்த வீடே தலைமையகம் போல் காட்சியளிக்கின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் பத்திரமுல்லையில் இடம்பெறும் கூட்டங்களைத் தவிர்த்து வருகின்றனர். அந்தக் கூட்டங்களை பஸில் ராஜபக்ச நடத்தி வருவதால் அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை.
விமல், கம்மன்பிலவை இணைக்கும் முயற்சி
இதனால் இப்போது அவர்கள் மஹிந்தவின் வீட்டில் இடம்பெற்று வரும் கூட்டங்களிலேயே கலந்துகொள்கின்றனர். அவர்கள் தான் விமல் தரப்பை இணைக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளனர்.
பஸிலுக்கும் விமலுக்கும் இணைந்து பயணிப்பது ஆகாத விடயம். அதனால் பஸிலுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என்பதாலும் விமலும் மகிந்தவும் நீண்ட காலமாக நெருக்கம் கொண்டவர்கள் என்பதாலும் மகிந்தவை இணங்க வைத்தே விமலை வளைக்கும் நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்று அறியமுடிகின்றது.
ஆகவே, 13 ஆம் திருத்தச் சட்டம், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் எழவுள்ளமையால், அவ்வாறான நேரத்தில் விமலின் குரல் மகிந்தவின் பக்கம் இருந்து ஒலிக்க வேண்டும் என்றும் மகிந்தவின் சகாக்கள் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்கால திட்டம்
எனவே தான் மகிந்தவும், விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரை மீண்டும் கூட்டணிக்குள் ஈர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எழப்போகும் அரசியல் பிரச்சினைகளின்போது விமல் தரப்பு மகிந்தவுடன் இருப்பது தான் ராஜபக்ச தரப்புக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று மகிந்தவின் சகாக்கள் பலர் கருதுவதால் அவர்களின் யோசனைக்கு அமைய மீண்டும் விமல் தரப்பை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
