2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மாயம் : எதிர்க்கட்சி எம்.பி விமர்சனம்
இலங்கையின் வெளிநாட்டு கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமானது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த நிதி உரிய கடன் வழங்குநரைச் சென்றடையாத நிலையில், இலங்கை தொழில்நுட்ப ரீதியாக மீண்டும் ஒரு 'கடன் தவணையை செலுத்தத் தவறிய' நாடாக மாறியுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறையாண்மைக் கடன் முகாமைத்துவப் பணிகள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து திறைசேரியின் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட போதே தாம் எச்சரித்ததாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கே பொறுப்பு
உலகளாவிய நிதிச் சந்தைகளைக் கையாளுவதற்குத் தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நியமிக்குமாறு அரச நிதி பற்றிய குழு வலியுறுத்தியும், திறைசேரி அதனைப் பொருட்படுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

குறித்த வெளிநாட்டுத் தரப்பிற்கு ஐந்து கடன் தவணைகள் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது வெறும் கவனக்குறைவு அல்ல, ஒரு பாரிய நிர்வாகத் தோல்வி என கூறியுள்ளார்.
பொது நிதியைக் கையாளுவதில் நாடாளுமன்றத்திற்கே அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு உள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனை ஒரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல், மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உடனடியாகப் பொறுப்புக்கூறல் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |