நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்…
ஈழத் தமிழர்களுக்கு நீதி என்பது நீதிமன்றச் சுவர்களுக்குள் எழுதப்படுகிற தீர்ப்பல்ல.
இன்னமும் தோண்டிக்கொண்டிருக்கும் நம் நிலத்திலிருந்து வெளிவரும் எலும்புக்கூடுகள் கேட்கும் மொழி. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரின் வெறுமையான கரங்களில் வெளிப்படும் மொழி.
தமது சொந்த நிலத்தின் எல்லையில் நின்றபடியே நிலங்களின் விடுவிப்புக்காக காத்திருக்கும் மக்களின் போராட்ட மொழி. இராணுவ ஆக்கிரமிப்பின் நிழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் மௌனப் போராட்டத்தின் அகக் குரல்.

சர்வதேச நீதி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 உலகம் சர்வதேச நீதி தினம் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் மீது இழைக்கப்படும் மிகக் கொடூரமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக் குற்றங்கள்—தண்டனையின்றி கடந்து செல்லக் கூடாது என்ற மனிதகுலத்தின் உறுதியை சர்வதேச நீதி நாள் நினைவூட்டுகிறது.
1998 ஜூலை 17 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோம் உடன்படிக்கை (Rome Statute) பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக வழிவகுத்தது. அதனால்தான் ஜூலை 17 என்பது உலகின் மனச்சாட்சியை நோக்கி நீதிக்காக கேள்வி எழுப்புகிற நாள்.
நீதியை யார் பெறுகிறார்கள்? யார் இன்னும் காத்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு ஈழத்தின் மண் இன்னும் பதிலளித்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்துவிட்டதாக உலகம் சொல்கிறது.
ஆனால் முள்ளிவாய்க்கால் இன்னும் முடிவற்று நீள்கிறது. ஏனெனில், நீதியின்றி எந்தப் போரும் முடிவதில்லை. நீதியின்றி எந்த இனப்படுகொலையும் வரலாறாக மாறுவதில்லை.
அது தொடர்ந்து நிகழ்காலத்தை இரத்தமாக்கிக்கொண்டே இருக்கும். நினைவுகளிலும் கனவுகளிலும் ஈழத் தமிழ் மக்கள் போரின் அக்க் காயத்தை சுமந்து, குருதியை சிந்துகிற ஒரு வாழ்வைத்தான் சுமக்கிறார்கள்.

ஈழ இறுதிப் போரின் அநீதிகள்
இந்த உலகமே பார்த்திருக்கிற 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இறுதிப் போரின் பெயரில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டவை மனிதகுலத்தின் மனச்சாட்சியையே சோதித்த அநீதிகளாகும்.
பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீதே இடைவிடாத குண்டுவீச்சுகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. மருத்துவமனைகள், பாடசாலைகள், தஞ்சமடைந்த மக்கள் வாழ்ந்த இடங்கள் கூட தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை.
சரணடைந்ததாகக் கூறப்படும் பலர் உயிருடன் மீளவில்லை. சிறுவனான பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.
உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் இறுதிக் காட்சிகள், போரின் பின்னணியில் பெண்களின் உடல்கள் எவ்வாறு போர்க்களமாக மாற்றப்பட்டன என்பதை நினைவூட்டும் மறுக்க முடியாத சாட்சிகளாக நிற்கின்றன.
இப்படியாக ஒன்றரை லட்சம் பொதுமக்களின் உயிர்களை காவுகொண்ட அந்த இறுதி நாட்கள், இன்னமும் நீதி கேட்கும் இரத்தச் சாட்சிகளாகவே வரலாற்றில் பதிந்துள்ளன.
போர் முடிந்த பின்னரும் அநீதிகள் முடிவடையவில்லை. பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்; சரணடைந்த தமது பிள்ளைகள், கணவர்கள், உறவினர்கள் எங்கே என்று கேட்டு தாய்மாரும் குடும்பங்களும் ஆண்டாண்டுகளாக வீதியோரங்களில் போராடி வருகின்றனர்.
பல இடங்களில் கூட்டுப் புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டும், அவற்றின் உண்மை முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை. வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, நினைவுகூரலுக்குக் கூட விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை முடிவுறச் செய்யாமல் தொடர்ச்சியான நீதிமறுப்பாகும்.

கண்ணீருக்கான நீதி எப்போது?
உண்மையை மறைப்பதும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்யத் தவறுவதும், ஈழத் தமிழர்களின் காயங்களை ஆற்றாமல் தலைமுறைகள் தாண்டி சுமக்கச் செய்துவரும் மிகப் பெரிய அநீதியாகவே தொடர்கிறது.
பதினேழு ஆண்டுகளைக் கடந்த பின்னரும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உறவுகளின் பெயர்களை இன்னும் அழைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இறந்தார்களா, உயிரோடிருக்கிறார்களா என்பதற்கான ஒரு பதிலைக்கூட அரசு வழங்காமல் அசுர மௌனத்தில் இருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீதியோரங்களில் அமர்ந்து போராடிய ஆண்டுகள், உலகின் மனச்சாட்சியையே சோதித்த ஆண்டுகளாக மாறின.
ஆனால் அவர்களின் கண்ணீருக்கான நீதி எப்போது கிடைக்கும்? இனப்படுகொலை குற்றச்சாட்டுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
சாட்சியங்களும், செயற்கைக்கோள் படங்களும், உயிர்தப்பியவர்களின் வாக்குமூலங்களும், கூட்டுக் கல்லறைகளும் உலகின் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மை உலகின் முன் தோன்றியபோதும் நீதிதான் கிடைக்கவில்லை.
சனல்4 போன்ற பல ஆதாரங்கள் வெளிவந்தபோதும் பொறுப்புக்கூறலை ஶ்ரீலங்கா அரசு தள்ளிவைத்துக் கொண்டே இருக்கிறது.

நீதியை தாமதிப்பது சட்டப்பிழை
நீதியை தாமதப்படுத்துவது என்பது ஒரு சட்டப் பிழை மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் தண்டிப்பதாகும். நீதி மறுக்கப்படும் ஒவ்வொரு நாளும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் இன்னொரு பாதுகாப்பு நாளாகவே மாறுகிறது.
ஈழத் தமிழர்களின் போராட்டம் இன்று ஒரு நீதிப் போராட்டமாக மாறியுள்ளது. அது பழிவாங்குவதற்கான போராட்டமல்ல. உண்மையை மறைக்க முடியாது என்பதற்கான போராட்டம். வரலாற்றை அழிக்க முடியாது என்பதற்கான போராட்டம்.
ஒரு இனத்தின் துயரத்தை அரசியல் வசதிக்காக மறைக்க முடியாது என்பதற்கான அறத்தின் போராட்டம். செம்மணியில் மண் பேசுகிறது. கேப்பாபுலவில் நிலம் பேசுகிறது. வலி வடக்கில் இராணுவ வேலிகள் பேசுகின்றன.
முல்லைத்தீவின் கடற்காற்று இறுதிப் போரில் இல்லாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்களை இன்னும் உச்சரிக்கிறது.
இன்று ஈழ நிலமே நீதிக்கான ஏக்கத்துடன் போராடுகிறது. ஈழத்தில் மாத்திரமல்ல, உலகில் எங்கும் இத்தகைய இனப்படுகொலை நிகழாமல் இருக்க வேண்டுமாயின், நீதியை ஈழ மக்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகம் பிரகடனப்படுத்திய சர்வதேச நீதி நாளுக்க அர்த்தம் கிடைக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 12 மணி நேரம் முன்