சீனாவிற்கு மாணிக்க கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது
இலங்கையில் இருந்து சீனாவுக்கு மாணிக்க கற்களை கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளைப் பகுதியை சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்க கல் வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 மணியளவில் சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட சீன விமான சேவையின் CA-426 இலக்க விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
மேற்கொள்ளப்பட்ட சோதனை
இதன்போது சுங்க அதிகாரிகளுக்கு இந்த இரண்டு நபர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த மாணிக்க கற்கள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணிக்க கற்களின் பெறுமதி சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா என குறிப்பிடப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட மாணிக்க கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுள்ள 390 மாணிக்க கற்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |