'2023 பெப்ரவரி வரை' உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிக்கை!
இந்த ஆண்டு நிறைவில் இடம்பெறவிருக்கும் உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சரிடம் கடிதம் மூலம் நேற்று (11) அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொரோனா தொற்றால் நீண்டகாலமாக பாடசாலைகள் மூடல், சுமார் நூறு நாட்களாக ஆசிரியர்களின் வேலைநிறுத்தம், எரிபொருள் நெருக்கடி போன்ற பிரச்சினைகளினால் கல்விச் செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப்ரவரி மாதம் ஒத்திவைக்க கோரிக்கை
அதேவேளை, அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் மீண்டும் பரீட்சை வழக்கம் போல் நடைபெற்றால் இப்போது தோற்றும் மாணவர்களுக்கு மீண்டும் பரீட்சைக்குத் தயாராவதற்கு குறைந்தபட்ச 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2021 ஆண்டு பரீட்சை முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு நடத்துவது நியாயமில்லை என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நியாயமான கால அவகாசம் வழங்கி 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பரீட்சையை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
