யாழில் பெண்களின் கைப்பையுடன் நடமாடிய இளைஞன்..! சோதனையில் சிக்கிய பொருட்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும் , ஹெரோயின் போதைப்பொருளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 வயதுடைய குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் இருந்தே இவ்வாறு நகைகளும், போதைப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான நடமாட்டம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞர் ஒருவர் நடமாடியுள்ளார்.
அது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண காவல்துறை புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து , அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
அதன் போது, இளைஞன் வைத்திருந்த பெண்களின் கைப்பையினுள் சுமார் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகை என்பன காணப்பட்டன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

