நான்கு வாரங்களுக்கு ஊரடங்கை அறிவித்த இங்கிலாந்தின் பிரதமர்!
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இங்கிலாந்தில் அண்மைய நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்து வருகிறது. இந்தப் புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் என்று இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, இங்கிலாந்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். ஜூலை 19ஆம் திகதிக்குப் பிறகே ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும்.
இது தொடர்பாக போரிஸ் ஜோன்சன் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் சூழலில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மேலும் பலருக்கு செலுத்த அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மேற்கொண்டு நீடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.