இலங்கையை அதிர வைக்கும் கொலைகள் -அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரையான ஒன்பது மாத காலப்பகுதியில் 435 கொலைகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (26) தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு (2021) முழுவதும் 521 கொலைகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பெறுமதி மிக்க உயிர்கள் இழப்பு
இந்த ஆண்டு பதிவாகியுள்ள கொலைகள் மூலம் பெறுமதி மிக்க உயிர்களை இழந்ததாகக் கூறிய அமைச்சரவைப் பேச்சாளர், கொலைகளுக்கான ஆதாரங்கள் பிரேதப் பரிசோதனைகள் மூலம் கிடைக்கின்றன என்று கூறினார்.
இதேவேளை, பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பான குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரேத பரிசோதனை நடத்தும் சட்டத்தில் திருத்தம்
பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள், மற்றும் நடைமுறைகளில் பொருத்தமான திருத்தங்களைச் செய்வதற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
மேற்படி குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.