சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 5 பேர் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டியும் பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மதியம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மற்றும் 14 வயதான சிறுவர்களும் 16 வயதான சிறுமியும் 38 வயதான ஆண் ஒருவரும் 37 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக மன்னார் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிணையில் செல்ல அனுமதி

இவர்கள் ஐவரையும் படகில் சட்டவிரோதமாக இந்தியா அழைத்துச் செல்லவிருந்த மன்னாரைச் சேர்ந்த படகோட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆறு நபர்களுளையும் நேற்றைய தினம் மன்னார் காவல்துறையினர் மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில், ஆறு நபர்களையும் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.
பத்து நபர்கள் அகதிகளாக தஞ்சம்

இதே வேளை, நேற்று அதிகாலை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து பத்து நபர்கள் இந்தியா இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 10 நபர்களே மேற்படி இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் ஒரு கைக்குழந்தை, மூன்று சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.