நாளை முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு!
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபையினால் வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த கொடுப்பனவுகள் நாளை (3) முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான இக்கொடுப்பனவின் முதற்கட்டத்தின் கீழ், தகுதிபெற்ற 621,761 பயனாளிகளுக்காக 3,108,805,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
அத்துடன் இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிதிகள் அனைத்தும் தகுதியான பயனாளிகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பில் இடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமக்குரிய கொடுப்பனவுத் தொகையை பயனாளிகள் அனைவரும் நாளை முதல் தத்தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் டி.எல். பி. ரிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |