7 வயது சிறுமி படுகொலை! ஒத்துழைப்பு வழங்கிய தாய் மற்றும் காதலி
படுகொலை
தனது காதலியின் மகளான ஏழு வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த கசிப்பு வியாபாரியை காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் கலவான நகரில் கைது செய்துள்ளனர்.
தனது மனைவி மற்றும் இரண்டு காதலிகளுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்த சந்தேகநபர் ஒரு வாரத்துக்கு முன் தன் காதலி ஒருவரின் மகளான ஏழு வயது சிறுமியை அடித்துப் படுகொலை செய்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையில் குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் கலவான பிரதேசத்தில் மறைந்திருக்கின்றார் என்று கிடைத்த தகவலையடுத்து காவல்துறை மற்றும் காவல்துறை அதிரடிப்படை குழுக்களால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனுக்கு உதவியாக இருந்த தாய்
சந்தேகநபர் தனது காதலியின் ஏழு வயது மகளை அடித்துப்படுகொலை செய்தார் எனவும், இதற்கு இச்சிறுமியின் தாயான காதலியும் சந்தேகநபரின் இன்னொரு காதலியும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இறந்த சிறுமியை இரத்தினக்கல் தோண்டப்பட்ட குழியில் உறையொன்றில் போட்டு சந்தேகநபர் புதைத்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது மகளின் கொலைக்குச் சந்தேகநபரான காதலனுக்கு உதவியாக இருந்த தாய் தனது மகள் காணாமல் போனார் என்று காவல் நிலையத்தில் பொய் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யதுள்ளார்.
இதன் போது காவல்துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலைச் சம்பவம் அம்பலத்துக்கு வந்ததுள்ளது.
