இஸ்ரேலில் மர்ம நபரின் துப்பாக்கி சூட்டில் கர்ப்பிணி உட்பட எண்மர் படுகாயம்
பிரார்த்தனை முடித்துவிட்டு திரும்பியவர்கள் மீதே துப்பாக்கிசூடு
இஸ்ரேலில் பேருந்து மீது நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தலங்களில் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பேருந்து மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் பேருந்தில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்பட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கர்ப்பிணி உள்பட 2 பேரின் நிலைமை கவலைக்கிடம்
இது பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். எனினும் காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அதை தொடர்ந்து காவல்துறையினர் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் கர்ப்பிணி உள்பட 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரணடைந்த தாக்குதல்தாரி
இதற்கிடையில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமாக காவல்துறையிடம் சரணடைந்ததாகவும், அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
