நீர்கொழும்பு சிறை வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள்
துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோதலுக்குப் பின்னர் சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதுவரை அங்கிருந்து பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் 600 கைதிகளும் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளின் சடலங்கள்
உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக தலா 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல் காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |