நாடு கடத்தப்பட்ட ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
டுபாய் மீது ஈரான் தாக்குதல்
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் டுபாயிலுள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்த போது அந்நாட்டு காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
டுபாய் மீது ஈரானால் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த காலப்பகுதியிலேயே இது நடந்ததாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது தொலைபேசியை அந்நாட்டு காவல்துறையினர் பரிசோதித்த போது, அதில் ஈரான் டுபாய் மீது நடத்திய தாக்குதல்களின் காணொளிகள் இருந்தமையால் தான் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தும் வரை தினமும் டுபாய் காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் ஈரான் தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இலங்கைக்குச் செல்வதற்காக தம்மை விமான பயணச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாகவும், அதன் பின்னரே தாம் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை
அவருக்கு எதிராக இருந்த போதைப்பொருள் குற்றச்சாட்டு வழக்கொன்றைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையினரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இலங்கை காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கையைப் பெறத் தயாராகிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சட்டப்பூர்வமாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி இலங்கையிலிருந்து டுபாயிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதுடன், இரு பெரும் வணிகங்களையும் முன்னெடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |