நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் - கவலை வெளியிட்ட சபாநாயகர்
நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயல்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்கள் வெட்கமடைய வேண்டுமென மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டதையடுத்து, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
விசேட விசாரணை

இதற்காக விசேட விசாரணை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெறுபவை தொடர்பில் தவறான செய்திகளை வெளியிடுவது, நாடாளுமன்றத்தின் நற்பெயரை பாதிப்படைய செய்யுமென மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தடன், நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் அறையில் இரு தலையணைகளும் மெத்தையொன்றும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் பொய்யானவை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வெளியான செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய மூவரடங்கிய விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.