அனுமதியின்றி கட்டப்படும் அரச கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : தவிசாளர் அறிவிப்பு
அரச திணைக்களங்களே அதிகமாக உள்ளூராட்சிச் சட்டங்களை மீறுவதாகவும், அரச நிதியில் அமைக்கப்படும் கட்டிட நிர்மாணங்களில் 90 வீதமானவை கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை எனவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆளுநரின் அறிவுறுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளுநரின் அறிவுறுத்தலின் பிரகாரம் எமது சட்டங்களின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு வியாபார உரிமம் வழங்கப்படுவதாயின் குடிபுகு சான்றிதழ் பெற கட்டாயப்படுத்துகின்றோம்.

இவ்விடயத்தில் ஆளுநரின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. மக்கள் மட்டுமல்ல அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும். சட்டங்களை உச்சமாக மக்கள் மீது மட்டும் பிரயோகித்து நாம் சட்டத்தின் ஆட்சி என புலகாங்கிதம் அடைய முடியாது.
அரச நிறுவனங்களின் கட்டுமானங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரச கட்டிடங்கள் உள்ளூராட்சியின் அனுமதி பெறாது உள்ளது. குடிபுகு சான்றிதல் இல்லை. பாடசாலைகள் கூட அனுமதி பெறுவதில்லை.
நீதிமன்ற அனுமதி
ஆகவே இக் கட்டிடங்களில் சுகாதாரம், உரிய பாதுகாப்பு, பயன்பாட்டு அங்கீகாரம் இன்றி தான்தோன்றித்தனமாக உள்ளூராட்சிச் சட்டங்களை மீறி பல அரச நிறுவனங்கள் செயற்படுகின்றன.

தனியாரின் கட்டிடங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்று இடித்தளிப்பதற்கான அனுமதியைப் பெறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் அரச தாபனங்கள் விடயத்தில் மக்களுக்கு மட்டும் சட்டம் ஏனையோருக்கு விடுபாடு என கூற இயலாது.
ஆகவே அமைக்கப்பட்ட அரச கட்டுமாணங்கள் தொடர்பில் விரைவாக பரிசீலித்து அனுமதிக்க நாம் தயார். நாம் சில நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்கத் தயாராகவுள்ளோம்.“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |