தொடரும் நெருக்கடி - வேலை நிறுத்த போராட்டத்தில் விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம்
எதிர்வரும் சித்திரை 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசின் முறையற்ற விவசாய நடவடிக்கையை எதிர்த்து குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தற்போதைய பிரச்சனைகளை தணிப்பதற்கான புதிய திட்ட முன்மொழிவுகள் அடங்கிய மகஜர் ஒன்றினை விவசாய பணிப்பாளர் நாயகம் விவசாய அமைச்சர் மற்றும் அரச தலைவருக்கு கையளிக்கவுள்ளது.
வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது,
அரசின் முறையற்ற விவசாய நடவடிக்கையை எதிர்த்து விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் புதிய கோரிக்கைகளுடனான மகஜர் கையளித்தல்.
எமது நாட்டில் ஒட்டுமொத்த விவசாய சமூகமும் கடுமையான உற்பத்தி குறைவுமட்டம் மற்றும் அதனால் பாரியளவு நிதி நெருக்கடி நிலையை முகம் கொடுத்துள்ளது என்பது யாவரும்அறிந்ததே. இதற்கான பிரதான காரணம் கடந்த வருடம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பசுமை விவசாய கொள்கையாகும். அவ்வாறான கொள்கை தவறு என அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என்ற வகையில் இது தொடர்பாக அகில இலங்கை ரீதியாக விவசாய போதனாசிரியர்கள் விவசாய அமைச்சிற்கும் விவசாய திணைக்கள தலைவர்களிற்கும் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்களை முன்னைய காலத்தில் முன்வைத்தனர் ஆனால் இவற்றை பொருட்படுத்தாது புறக்கணித்துள்ளனர்.
எனவே மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளால் தற்போது இலங்கையின் விவசாய சமூகம் எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு தற்போதைய பிரச்சனைகளை தணிப்பதற்கான புதிய திட்ட முன்மொழிவுகள் அடங்கிய மகஜர் ஒன்றினை விவசாய பணிப்பாளர் நாயகம் விவசாய அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கையளிக்க உள்ளோம் இதற்காக எதிர்வரும் சித்திரை 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும் இவ் ஒழுங்கமைப்புகள் யாவும் அகில இலங்கை விவசாய போதனாசிரியர்கள் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு எமது வட மாகாண விவசாய போதனாசிரியர்கள் தொழிற்சங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்று வடமாகாணத்திலும் இந்த பணிபுறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
அந்த இரண்டு தினங்களிலும் எமது விவசாய விரிவாக்க நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் புதன்கிழமையிலிருந்து வழமைபோல விவசாய விரிவாக்கல் நடவடிக்கையை முன்னெடுப்போம் என்பதை விவசாயிகளுக்கு அறிய தருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.