தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மைத்திரி விமர்சனம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது அமைக்கப்பட்டிருப்பது சர்வகட்சி அரசாங்கமோ அல்லது இடைக்கால அரசாங்கமோ அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தையே மீண்டும் அமைத்துள்ளனர் என தாம் கருதுவதாகவும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பான விடயங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். இதில் வெளியான விடயங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அச்சமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் வழங்க முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அனைவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக செயற்பட வேண்டும். நாடு இப்போது மிகவும் துரதிஷ்டவசமான நிலமைக்குள் தள்ளப்படும் நிலைமையே காணப்படுகின்றது. உணவு மற்றும் மருந்துப் பிரச்சனை பிரதானமான பிரச்சனையாக உள்ளது. இதனை தீர்ப்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்னர் நாங்கள் சர்வ கட்சி அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் யோசனைகளை முன்வைத்தோம். ஆனால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் சர்வ கட்சியோ, இடைக்கால அரசாங்கமோ அல்ல. பெரும்பாலும் முன்னர் இருந்த அரசாங்கமே அமைக்கப்படுவதை போன்றே தெரிகின்றது.
இந்தநிலைமையில் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாமல் போகும் என்றார்.
