பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி - பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன்
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட உதவிய வழக்கில் அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த தமிழ் இளைஞரொருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த சுந்தர் நாகராஜன் என்ற நபரை, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் லண்டனில் வைத்து கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸ் என்ற இடத்தில் ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப்பரிமாற்ற மோசடி
இவர் அமெரிக்காவில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் பணப்பரிமாற்ற மோசடிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இவரை கைது செய்து நாடு கடத்தும்படி, அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்று, பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியளித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில், பிரித்தானியா வேல்ஸ் பகுதியை சேர்ந்த 50 வயது நபரை, பயங்கரவாத எதிர்ப்பு படையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
ஹிஸ்பல்லா என்ற பயங்கரவாத அமைப்பு
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுந்தர் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு, நஸீம் அஹமது நிதி உதவி அளிப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இவருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசுகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
